ஹலோ! இந்த வாரம் என்னப் பத்தி இல்ல, ஆஸ்துமா பத்தி!

ஆஸ்துமா அறிவோம்-டாக்டர் ஸ்ரீ காந்த்

 காற்றோட்டமில்லாத ஒரு சிறிய அறையினுள் கதவைச் சாத்திக் கொண்டு உங்களால் எவ்வளவு நேரம் இருக்க முடியும்? 5 நிமிடம்? 10 நிமிடம்? கண்டிப்பாக அதற்கு மேல் நம்மால் இருக்க முடியாது. ஆனால் நாள் முழுக்க மூச்சு விட முடியாமல் அனுபவிக்கும் அவஸ்தை ஒரு ஆஸ்துமா நோயாளிக்குத் தான் தெரியும்.
இந்தியாவில் ஒன்றரை கோடியிலிருந்து இரண்டு கோடிப் பேர் ஆஸ்துமாவினால் அவதிப் படுகிறார்கள். உலகம் முழுக்கவே சுமார் 30 கோடிப் பேர் இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். உலகம் முழுக்க ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாகி இறந்து போகிறார்கள்.
ஆஸ்துமாவைப் பற்றிய நமது சந்தேகங்களை நுரையீரல் சிறப்பு நிபுணர் டாக்டர்.K.ஸ்ரீ காந்த் MD (Chest), FCCP (USA) அவர்களிடம் கொட்டினோம்.  
டாக்டர். K. ஸ்ரீ காந்த்



டாக்டர்.K.ஸ்ரீ காந்த் MD (Chest), FCCP (USA) தனது M.B., B.S., கல்வியை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். மேலும் நுரையீரல்  பற்றிய பட்ட மேற்படிப்பை சென்னை  மருத்துவக் கல்லூரியில் பயின்றார். மேலும் அமெரிக்க நாட்டின்  நுரையீரல் சிறப்பு மருத்துவர் சங்கத்தின் பட்டய உறுப்பினராகவும் உள்ளார். நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 15 வருடங்களாக நுரையீரல் சம்பந்தமான துறையில் தனது சேவையைப் புரிந்து கொண்டிருக்கிறார்.மேலும் தொடர்புக்கு:
ஸ்ரீ பாலா மெடிக்கல் சென்டர்,
திருச்சி சாலை,
இராமநாதபுரம்,
கோவை - 641 045
போன்: 0422-2323333

அவரிடம் பேசியதிலிருந்து: 

டாக்டர், ஆஸ்துமா மற்றும் அதன் சிகிச்சை முறை பற்றி நம்மிடையே பல்வேறு விதமான தவறான எண்ணங்கள் உள்ளன. பொதுவாக நோயாளிகளின்
இது தெரியாமப் போச்சே?
சந்தேகங்கள் என்ன?

  ஆஸ்துமாவைப் பற்றி நிறைய தவறான நம்பிக்கைகள் உள்ளன.
தவறான நம்பிக்கை 1
ஆஸ்துமாவை திறம்பட குணப்படுத்த முடியாது.
உண்மை:   
ஆஸ்துமாவை திறம்படவும், பாதுகாப்பான முறையிலும் குணப்படுத்த முடியும்.
தவறான நம்பிக்கை2:  
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் நலமாகவும், செயல்பாட்டுடனும் விளங்க முடியாது.
உண்மை: 
முற்றிலும் தவறு.  ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை மேற்கொண்டு விளையாட்டுகளிலும், பல்வேறு உடற்பயிற்சி துறைகளிலும் ஏன் ஒலிம்பிக்கில் கூட தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார்கள்.
தவறான நம்பிக்கை 3: 
இன்ஹேலர்களை அடிக்கடி உபயோகப்படுத்துவது தவறு. நாம் அதற்கு அடிமையாக நேரிடலாம். இன்ஹேலர்களை உறிஞ்சுவதை கடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.
உண்மை:  
இதுவும் தவறான எண்ணம். இன்ஹேலர்களை உபயோகிப்பதனால் நாம் அதற்கு அடிமையாக மாட்டோம். இது கடைசி ஆயுதம் அல்ல. உண்மையில் ஆஸ்துமாவைக் குணப்படுத்துவதில் முதன் முதலில் கையாள வேண்டிய மருத்துவ முறை இது.
தவறான நம்பிக்கை 4: 
இன்ஹேலர்கள் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
உண்மை:  
முற்றிலும் தவறு. இன்ஹேலர்களை உறிஞ்சுவதன் மூலம்  பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை.

டாக்டர், ஆஸ்துமாவைப் பற்றிய பொதுவான தகவல் ஏதாவது?

ஆஸ்துமா என்ற கிரேக்கச் சொல்லுக்குப் பொருள் ' மூச்சில்லாமல்' (Breathless) என்பதாகும். உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி உலகம் முழுக்க சுமார் 30 கோடிப் பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக நமது நாட்டில், இந்நோயின் தாக்கம் அதிகளவில் உள்ளது. ஆஸ்துமா அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நகர் மயமாதல்,சுற்றுச் சூழல் கேடடைதல், மாறும் வாழ்க்கை முறை போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. 
மாறும் வாழ்க்கை முறையை குறிப்பிடக் காரணம், அன்றாட வாழ்வில் நாம் அளவுக்கு அதிகமாகப் பயன் படுத்தும் உணவு பதப் பொருட்கள், உணவுக்கு வண்ணம் சேர்க்கும் நிறமிகள் போன்றவையும் ஆஸ்துமா வளர்வதற்கு உதவுகின்றன. 

ஆஸ்துமா என்றால் என்ன?

ஆஸ்துமா என்பது   ஒரு நிலை. (Condition). மூச்சுப் பாதைகளை பாதிக்கின்ற நிலையை ஆஸ்துமா என்கிறோம். மூச்சுப் பாதைகள் நமது நுரையீரலுக்கு காற்றைக் கொண்டு செல்லும் மெல்லிய குழாய்கள். பல்வேறு காரணங்களால் மூச்சுப்பாதை (Airways)களை  சுற்றியுள்ள தசை இறுக்கமடைகிறது. இதனால் மூச்சுப் பாதை சுருங்கி விடும். மேலும் இதன் மென்மையான தோல் சிவந்து வீங்கிவிடும். மற்றும் சளியையோ அல்லது சீழையோ உற்பத்தி செய்யும். இதன் காரணமாக மூச்சுப் பாதை மிகச் சுருங்கி எரிச்சலையும் கொடுக்கத் தொடங்கும். இந்த அறிகுறிகள் நம்மை ஆஸ்துமாவிற்கு இட்டுச் செல்லும்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன?

பொதுவான அறிகுறிகள் என்னவெனில்,
  1. மூச்சுவிடத் திணறுதல் - Wheezing
  2. மூச்சுவிட முடியாமை 
  3. இருமல் குறிப்பாக இரவு நேரங்களில் 
  4. நெஞ்சில்  இருக்கமாயிருத்தல்  
ஒரு குறிப்பிட்ட வகை ஆஸ்துமாவில் இருமல் மட்டுமே அறிகுறியாய்  இருக்கும். எனவே, தொடர்ச்சியான இருமல் இருந்தால் வெறும் இருமல்தானே என்று அலட்சியப் படுத்தாமல், ஆஸ்துமா இருப்பதற்கு வாய்ப்புள்ளதா என்று தங்களின் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துத் தெளிவு பெறுங்கள்.

ஆஸ்துமாவிற்கு காரணம் என்ன டாக்டர்?
என்னது? சத்தியமா நா காரணம் இல்லீங்க. நம்புங்க பாஸ்!

ஆஸ்துமா எந்த வயதிலும் வரலாம்.எனவே எது ஆஸ்துமாவை தூண்டுகிறது என்பதை அறிவது கடினம். இருந்த போதிலும் இதுவரை அறியப் பட்ட காரணங்கள்:

ஆஸ்துமா அலர்ஜி சம்பத்தப்பட்ட நோயானதால் அலர்ஜியைத் தூண்டக்கூடிய பல்வேறு காரணிகளும் ஆஸ்துமாவை வரவழைக்கின்றன.உங்களின் பெற்றோரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ ஆஸ்துமா இருந்திருந்தால் பெரும்பாலும் உங்களுக்கும் ஏற்படலாம்.
மாறிவரும் வாழ்க்கை முறைகள் குறிப்பாக வீட்டில் உணவில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் ஆஸ்துமா உண்டாகலாம்.

கர்ப்பிணிப்  பெண்கள் புகை பிடித்தால் குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கு அதிக சந்தர்ப்பம் உள்ளது. இந்தியப் பெண்கள் பெரும்பாலும் புகைப் பிடிப்பதில்லை.ஆனால் கணவரின் புகைப் பழக்கத்தால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப் படலாம்.
நாம் வேலை பார்க்கும் இடத்தில் தூசு  பல்வேறு  ரசாயனப் பொருட்களாலும் ஆஸ்துமா வரலாம்.
சுற்றுப்புறச் சூழல் கேடடைவதனாலும் ஆஸ்துமா வரலாம்.

ஆஸ்துமாவை தூண்டக்கூடிய காரணிகள் என்னென்னெ?

ஒவ்வொருவரின் ஆஸ்துமாவும் வேறு வேறானவை. மூச்சுப் பாதைக்கு எரிச்சலைக் கொடுக்கும் எவையும் ஆஸ்துமாவைத் தூண்டும். பொதுவான காரணிகளாக வீட்டில் இருக்கும் தூசு உண்ணிகள் ,மகரந்தத் தூள் , நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளின் ரோமம், இறகு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஆஸ்துமாவிற்கும் கரப்பான் பூச்சிக்கும் கூட சம்பந்தமிருப்பதாகக் கூறுகிறார்கள். எங்கெல்லாம் கரப்பான் பூச்சிகள் அதிகமாய் உள்ளதோ அங்கெல்லாம் ஆஸ்துமாவின் அபாயம் அதிகமுள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
குளிர், புகை  கூட ஆஸ்துமாவை விரைவு படுத்தலாம்.
சில மருந்துகள் உதாரணமாக ஆஸ்பிரின், சில வலி நிவாரணிகள், தீவிர இரத்த அழுத்தத்திற்கு கொடுக்கப்படும் சில மாத்திரைகள் கூட ஆஸ்துமாவின் தாக்குதலுக்குக் காரணமாகின்றன.

ஆஸ்துமா எப்படி நமது வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்?

கட்டுப்படுத்த முடியாத ஆஸ்துமா நமது சமூக வாழ்வில் பல்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுத்தல், படிப்பில் கவனமின்மை போன்றவை நமது குழந்தைகளிடையே காணப் படும். வேலைக்கு அடிக்கடி விடுமுறை எடுத்தல், வேலையில் திறமைக் குறைவு போன்றவை பெரியவர்களைப் பாதிக்கும். 

ஆஸ்துமாவை எவ்வாறு மருத்துவ ரீதியாகக் கண்டறிவது?

இதற்கு ஒரு சாதாரண பரிசோதனை போதும். Spirometer என்று அழைக்கப்படும் செயற்கை சுவாச கருவி மூலம் இதனை எளிதாகக் கண்டறியலாம்.இதன் மூலம் நமது நுரையீரலின் இயங்கு திறனைக் கண்டறியலாம். இந்தப்
பரிசோதனை பரவலாக மேற்கொள்ளப் படுகிறது.இப்பரிசோதனையின் மூலம் ஆஸ்துமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

 

 

 நம்முடைய ஆஸ்துமாவை நாமே கண்காணிக்க முடியுமா?

மருத்துவமனை செல்லாமல் நமது வீட்டிலிருந்தபடியே நமது ஆஸ்துமா நிலையைக் கண்காணிக்க முடியும். இதற்கு " Peak Flow Meter" என்ற கையடக்கக் கருவி உதவுகிறது. இந்தக் கருவியில் உள்ள துளையின் வாயிலாக நாம்
வேகமாக ஊதும்போது நமது ஊது திறனை இக்கருவி காட்டுகிறது. ஒரு சிறிய டைரியில் காலையிலும் மாலையிலும் இந்த மீட்டர் ரீடிங்கை குறித்து வைப்பதன் மூலம் ஆஸ்துமா எந்த அளவிற்கு கட்டுப் பாட்டில் உள்ளது என்பதை அறிய முடியும். ஊது திறன் குறைந்தால் நாம் அதற்கேற்ப மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம். குறிப்பாகச் சொல்லப் போனால் தெர்மா மீட்டர்,  BP அளவிடும் கருவி போன்றவற்றோடு இதனை ஒப்பிடலாம்.

டாக்டர், ஆஸ்துமாவின் சிகிச்சை முறைகளைப் பற்றிக் கூறுங்களேன்?

கடந்த இருபது வருடங்களில் ஆஸ்துமாவிற்கான சிகிச்சை முறைகள் பல மடங்கு மேம்பட்டுள்ளன. எல்லோராலும் விரும்பப் படும் முறை  "இன்ஹேலர்"தான் . இன்ஹேலரின் வாயிலாக மருந்து உறிஞ்சப் படும் போது அது நேரிடையாக நுரையீரலை அடைந்து விரைவான நிவாரணத்தை தருகிறது.  இது ஊசி வழியாகவோ அல்லது  மாத்திரை வழியாகவோ செலுத்தப் படும் மருந்து அளவைக்  காட்டிலும்  குறைவே.மேலும், மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் மருந்து நேரிடையாக நுரையீரலை அடைகிறது. இரத்தத்தில் சேர்ந்து பின் நுரையீரலை அடைவதில்லை.  எனவே பக்க விளைவுகளைப்  பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை.
ஆஸ்துமாவிற்க்கான  மருத்துவ முறைகள் இரண்டு வகைப் படும்.
1. மீட்பு மருந்து முறை .
2. காப்பு மருந்து முறை.
மீட்பு மருந்து முறையில் மருந்து விரைவாகச் செயல்பட்டு ஆஸ்துமாவின் தொல்லையிலிருந்து நமக்கு நிவாரணம் தருகிறது. இந்த முறை ஆஸ்துமா தாக்குதலிலிருந்து ஒரு நோயாளியைக் காக்கிறது.

காப்பு மருந்து முறை: இதன் பெயரே இதனை விளக்குகிறது இதன்  படி ஆஸ்துமா நோயால் பாதிக்ககப்பட்ட ஒருவர்  தொடர்ச்சியாக மருந்து உட்கொள்வதன் மூலம் அதன் அறிகுறிகளைத் தடுக்க முடியும்.இதில் முக்கியமான விஷயம் என்னவெனில்  நோயின்  அறிகுறிகள்  கொஞ்சம்  குறைந்தாலும் நாம் மருந்து உட்கொள்ளுவதை நிறுத்தி விடுவோம். அது முற்றிலும் தவறு. ஆஸ்துமா ஒரு 'நாள்பட்ட  நோய்'(Chronic). சர்க்கரை நோய் போன்று இதற்கு தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்புத் தேவைப்படுகிறது. இந்நோய்க்கான சிகிச்சையை எப்போது நிறுத்தலாம் என்பதை உங்கள் மருத்துவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆஸ்துமாவினால் ஏற்படும் மரணங்களுக்கு பெரும்பாலும் காரணமாய் இருப்பது சரியாகக் கணிக்கத் தவறுதல், குறைபாடுள்ள வைத்திய முறைகளை மேற்கொள்ளுதல் (Under Treatment),  குறிப்பிட்ட மருந்துகளை குறிப்பிட்ட அளவில் உட்கொள்ளாமல் இருப்பது போன்றவைதான்.
இன்றைய நவீன மருத்துவத்தில் ஆஸ்த்மாவை முழுமையாக குணப்படுத்தலாம். அவ்வாறிருக்க ஒரு ஆஸ்துமா நோயாளி ஏன் குறையுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும்? பயப்படாதீர்கள்! ஆஸ்துமாவை  தடுக்க முடியும்: வந்தால் குணப் படுத்த முடியும்.

ஆஸ்துமா சிகிச்சையில் பயன் படுத்தப் படும் மருந்துகளைப் பற்றிக் கூறுங்களேன்?

பொதுவாக ஆஸ்துமாவை குணப்படுத்த கோட்டிகோ ஸ்ட்ராயிட்
Cortico Steroids மருந்து இன்ஹேலர்  வழியாக தரப் படுகிறது.

டாக்டர்,  ஸ்ட்ராயிட் என்று சொல்கிறீர்கள். இது பாதுகாப்பானதா?

 கவலையே வேண்டாம். ஆஸ்துமாவை குணப்படுத்த பயன்படுத்தப் படும் கோட்டிகோ ஸ்ட்ராயிட் நமது உடலில் இயற்கையாகவே உள்ள ஸ்ட்ராயிட்ன் பிரதியே. ஓட்டப் பந்தய வீரர்களாலும், உடலைக் கட்டாக வைத்திருக்க வேண்டி பயிற்சி செய்பவர்கள் பயன் படுத்தும் அனொபொலிக் ஸ்ட்ராயிட்களிலிருந்து  Anabolic Steroids முற்றிலும் மாறுபட்டது.

டாக்டர் ஆஸ்துமாவைப் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் ஏதாவது?

இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சி முடிவுகள் ஆஸ்துமாவிற்கும் குண்டாயிருப்பதற்கும் உள்ள உறவைப் பறை சாற்றுகின்றன. குறிப்பாக் குண்டாயிருக்கும் பெண்களுக்கு ஆஸ்துமா  வருவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் உள்ளன. இதைக் குறிப்பிடுவதற்குக்
நாங்கள்லாம் ஆஸ்துமாவுக்கே அல்வா கொடுப்போம்!
காரணம் நமது வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம்  ஆஸ்துமாவை தடுக்க முடியும் என்பதே.இது எங்களின் மருத்துவர் குழு கோவை PSG மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நடத்திய ஆராய்ச்சியில் நிரூபணமாயிற்று. இந்த ஆராய்ச்சி முடிவு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.

ஆஸ்துமாவினால்  பாதிக்கப் பட்டவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

 ஒவ்வொரு வருடத்தின்  "மே" மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை "உலக ஆஸ்துமா தினமா"க அனுசரிக்கப் படுகிறது.ஆஸ்துமாவைப் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்துவதே " உலக ஆஸ்துமா தினத்தின்" நோக்கமாகும். இந்த வருடத்தின் மையப் பொருள் " உங்களால் உங்கள் ஆஸ்துமாவைக் கட்டுப் படுத்த முடியும்" என்பதே. இது இக்காலத்திற்கேற்றபடி மிகச் சரியானதாகும். மிகப் பெரிய விளையாட்டு வீரர்கள், இசை அறிஞர்கள், புகழ் பெற்ற அரசியல் வாதிகள் ஏன் அறிவியல் விஞ்ஞானிகள் கூட ஆஸ்துமாவினால் பாதிக்கப் பட்டு இருந்தாலும் அதை எவ்வாறு வெற்றிகரமாக எதிர் கொள்வது என்பதை அறிந்து வெற்றிகரமான மனிதர்களாக திகழ்ந்திருக்கிறார்கள்.

இன்றைய நவீன மருத்துவத்தில் ஆஸ்துமாவை  திறம்பட குணப்படுத்த முடியும். ஆஸ்துமாவினால் இறப்பு என்பது  அபூர்வமானதே!




 

0 comments:

கருத்துரையிடுக